வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வேலை தேடி செல்லும் 50 பேரை தொடர்பு கொள்ள முடியாமல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: வெளிநாட்டு வேலை வாய்ப்பை நம்பி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் சைபர் மோசடி கும்பல்களிடம் சிக்கி வருவதாக கோவை மாநகர காவல் துறை இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் ஹோட்டல் வேலை, அலுவலக வேலை, அதிக சம்பளம், இலவச தங்கும் வசதி போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளித்து இளைஞர்களை அழைத்துச் சென்று, பின்னர் சைபர் மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹோட்டல் வேலைக்காக கம்போடியா சென்ற நிலையில், அங்கு சென்ற பிறகு அவரை சைபர் மோசடியில் ஈடுபட கும்பல் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரது பாஸ்போர்ட்டை பறித்து வைத்து கடுமையாக துன்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை மோசமடைந்த அந்த இளைஞர், கோவையில் இருந்த தனது தாயை தொடர்பு கொண்டு நடந்த கொடுமைகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பணி காரணமாகவோ அல்லது சுற்றுலா விசாவில் சென்றவர்களோ தொடர்பான பட்டியலை வைத்து விசாரணை மேற்கொள்ள CBCID போலீசார் மாநகர சைபர் கிரைம் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


அதன்படி, கோவையில் இருந்து தென்கிழக்கு நாடுகளுக்கு பணி காரணமாகவும், சுற்றுலா விசாவிலும் சென்ற 140 பேரிடம் இதுவரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 50 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவர்கள் சைபர் குற்ற கும்பல்களிடம் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையினர் கூறுகையில், தொடர்பு கொள்ள முடியாதவர்களின் பட்டியல் CBCID பிரிவினரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதிக சம்பளம், எளிய வேலை, இலவச தங்கும் இடம் போன்ற விளம்பரங்களை நம்பி இளைஞர்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்தனர். மேலும், கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறும் நிறுவனங்கள் குறித்து, அங்கு ஏற்கனவே பணிபுரிபவர்கள் அல்லது நம்பகமான மூலங்கள் மூலம் உறுதி செய்த பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்றும், அவசர முடிவுகள் உயிரிழப்பிற்கும் வழிவகுக்கலாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....