திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் தேவாலயத்திலிருந்து திரும்பும் வழியில் அவர்களது புதிய மாருதி சியாஸ் கார் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர்.
திருப்பூ: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாதிக் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வில்லியம்ஸும் அவரது மனைவியும் தங்களது புதிய மாருதி சியாஸ் காரில் தேவாலயத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் திருப்பூர் சாலை சந்திப்பை அடைந்தபோது, திடீரென காரின் முன்புற இன்ஜின் பகுதியிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், வில்லியம்ஸ் காரை அருகிலுள்ள ஆள் நடமாட்டம் குறைவான பகுதிக்கு திருப்பினார். உடனடியாக இருவரும் காரிலிருந்து வெளியேறி தப்பித்தனர்.
சில நிமிடங்களிலேயே இன்ஜின் பகுதி முழுவதும் தீப்பற்றிக் கொண்டது.
காரின் உட்புறம் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.
இச்சம்பவம் குறித்து உடுமலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வில்லியம்ஸ் தம்பதியினர் இந்த சொகுசு காரை வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வாங்கியிருந்தனர். புதிய கார் ஒன்று இவ்வாறு எரிந்து நாசமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.