'GST கவுன்சிலுக்கு தலைமை மத்திய அரசு என்றாலும் மாநிலப் பிரதிநிதிகளின் ஒப்புதலோடு தான் வரி விதிக்க முடியும்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் 'விருட்சம்' திட்டத்தை தொடங்கி வைத்தார். GST, மது ஒழிப்பு, மணிப்பூர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் 'விருட்சம்' எனும் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.





வானதி சீனிவாசன் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக "விருட்சம்" என்ற திட்டத்தின் கீழ் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பூங்காக்கள் ஆகியவற்றில் மியாவாக்கி காடுகள் எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கி வருவதாகவும் மேலும் கோவை தெற்கு தொகுதியில் இளைய சமுதாயத்தை கார்பன் சமநிலையை நோக்கி பயணிக்க ஊக்குவித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மத்திய நிதி அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் 15 மத்திய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு தொழில் அமைப்பினரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருவதாகவும் இந்தியாவிலேயே முதல்முறையாக இது போன்ற நிகழ்ச்சி கோவையில் நடத்தப்படுகிறது என்றும் கூறிய அவர், இதற்கு உதவிய மத்திய நிதி அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

கோவை மக்கள் சேவை மையம் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக 1500 ஏழை பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கி இருப்பதாகவும் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருப்பதாக கூறிய அவர், அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

பாஜக உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருவதாகவும் நாளை கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடைபெறும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் மது ஒழிப்பிற்காக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருப்பதாக கூறினார். திருமாவளவனுக்கு கூட்டணியில் என்ன பிரச்சனை என தெரியவில்லை என்று கூறிய அவர், பட்டியலினத்தை சார்ந்தவர்களின் பிரச்சனைகள், பட்டியலின மாணவர்கள் மீதான தாக்குதல் என பல்வேறு பிரச்சனைகள் உள்ள சூழலில் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து விசிக புதிய அரசியல் சக்தி என்பதை நிரூபிப்பதற்காகவோ அல்லது கூட்டணியில் உள்ள திமுகவிற்கு ஏதோ ஒரு செய்தியை சொல்வதற்காகவோ தான் இத்தகைய நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றே பார்க்கிறோம்" என்றார். தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்காக அதிக பணிகளை செய்து வருவதுபாஜக தான் என்று கூறினார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்திற்கு பயன் இருந்தால் அதனை வரவேற்பதாகவும் மத்திய நிதி அமைச்சர் கொங்கு மண்டல வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருவதாகவும் கூறினார். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கோவை வேகமாக முன்னேறி வரும் மாவட்டமாக இருக்கிறது என்றும் கூறினார்.

GST பிரச்சனை என்றாலே மோடி தான் காரணம் என்கிறார்கள் என்று கூறிய அவர், GST என்பது மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து பயணிக்கும் ஒரு பயணம் என்றார்.

தமிழகத்தில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் கடந்த தேர்தலில், பலமான கட்சிகளை பின்னுக்கு தள்ளி பல இடங்களில் பாஜக முன்னிலையில் வந்திருக்கிறது என்றும் கூறினார்.

GST கவுன்சிலுக்கு தலைமை மத்திய அரசு என்றாலும் மாநிலப் பிரதிநிதிகளின் ஒப்புதலோடு தான் வரி விதிக்க முடியும் என்றும் கூறினார்.

கார் பந்தயத்தை மாநில அரசு ஊக்குவிப்பதில் தவறில்லை என்றும் இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட் கேபிடல் கோவை தான் என்றும் கூறினார். இது கவனிக்கப்படாமல் உள்ளது என்றும் கோவைக்கு கார்பந்தயங்கள் வந்தால் வரவேற்பதாகவும் கூறிய அவர், ஆனால் அது பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது என்றும் அரசு நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் கூறிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் விவகாரத்தை நேரடியாக கவனித்து வருவதாகவும் கூறினார். 

கல்லூரிகளில் பாலியல் சீண்டல் நடைபெறுவதாக மாணவிகள் தொடர்ச்சியாக புகார் அளித்து வருவதாகவும் தங்களது அடையாளங்கள் வெளியே தெரியாமல் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் நிலவி வருகிறது என்றும் கூறினார்.

விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து கூறவில்லை என்றும் வாக்கு வங்கிக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு வாழ்த்து கூறுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவிலும் சம்பந்தமில்லாத விஷயங்களை பேசி வருகிறார் என தெரிவித்தார்.

Newsletter

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...