கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் சிறுதுளி அமைப்பு இன்று கோவையில் உள்ள மூன்று குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கோவை மாவட்டம், பேரூர் அருகே உள்ள சங்கர நாராயண சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை மற்றும் நாகராஜபுரம் சாலையில் உள்ள மூன்று குளங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று அதனை தூர்வாரும் பணி நடபெற்று வருகிறது.

பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த பணிகளுக்கான நிதி உதவியை ரோட்டரி க்ளப் ஆப் கோயம்பத்தூர் சென்ட்ரல் மற்றும் ஜி.இ.ஆயில் நிறுவனங்கள் வழங்கின.

சுமார் ரூ.1.5 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் இந்த குளங்களில் இன்று காலை பூஜை நடைபெற்றது. இதில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ரோட்டரி க்ளப் சென்ட்ரல் தலைவர் மாணிக்கம், ஜி.இ.ஆயில் நிறுவனத்தின் அதிகாரி பல்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, குளங்களை தூர்வாரும் பணியில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாத காலத்திற்குள் இந்த குளம் தூர்வாரப்படும் என்றும் அடுத்த பருவமழையின் போது இந்த குளங்களில் நீர் தேங்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
