வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்து கொலை, கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

கோவை கருமத்தம்பட்டி மற்றும் கோவில்பாளையம் பகுதியில் 2 முதியவர்களை கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வேலு (29), கே.ஜி.சாவடியை சேர்ந்த சஞ்சீவி (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் இருவேறு இடங்களில் முதியோரை கொலை செய்து விட்டு நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் அருகே உள்ள கங்காலட்சுமி தோட்டத்தை சேர்ந்தவர் பாப்பா (73). இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மூதாட்டியை வெட்டி கொலை செய்து விட்டு அவர் அணிந்து இருந்த 2 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதேபோல கோவில்பாளையம் அருகே உள்ள கீரநத்தத்தை சேர்ந்த சித்த வைத்தியர் செல்வமணி (60) என்பவரை கடந்த 11-ந் தேதி மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அவரிடம் இருந்து ரூ.500 பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

நடக்க முடியாமல் வீல்சேரை பயன்படுத்தி வந்த செல்வமணி ரூ.15 ஆயிரம் பணத்தை வீல் சேருக்கு அடியில் வைத்து இருந்தார். இதனால் அந்த பணம் தப்பியது.

மர்ம நபர்கள் கொலை நடந்த இடத்தில் இருந்த 1 கிலோ மீட்டர் தூரத்தில் பாலத்துக்கு அடியில் செல்போனை வீசி சென்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த 2 கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் கொலை நடந்த பகுதிகளில் உள்ள செல்போன் டவரை ஆய்வு செய்த போது 2 வாலிபர்களின் செல்போன் எண்கள் 2 கொலைகள் நடந்த பகுதியில் சுற்றி வந்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மூதாட்டி, வைத்தியர் உள்பட 2 பேரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வேலு (29), கே.ஜி. சாவடியை சேர்ந்த சஞ்சீவி (33) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது,

எங்கள் மீது வழிப்பறி, கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. 2 பேரும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். ஜெயிலில் இருந்த போது எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

2 பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். அப்போது வெளியே சென்றதும் கூட்டாக சேர்ந்து, தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்க திட்டம் போட்டோம்.

அதன்படி நாங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தோம். பின்னர் 2 பேரும் கூட்டாக சேர்ந்த புறநகர் பகுதிகளில் வயதானவர்கள் யாராவது தனியாக வசிக்கிறார்களா என நோட்டமிட்டோம்.

அப்போது தான் கணியூர் கங்காலட்சுமி தோட்டத்தில் 72 வயது மூதாட்டி தனியாக இருப்பது தெரியவந்தது. எனவே அவரை கொலை செய்து அவர் வீட்டில் உள்ள நககைளை கொள்ளையடிக்க திட்டம் போட்டோம்.

அதன்படி கடந்த மாதம் 31-ந் தேதி மூதாட்டியை வெட்டி கொலை செய்தோம். பின்னர் அவர் அணிந்து இருந்த 2 பவுன் நகைகளை பறித்தோம். வீட்டிற்குள் சென்று கொள்ளையடிக்கலாம் என்று உள்ளே சென்ற போது ஆட்கள் அங்கு வந்து விட்டனர். அங்கு இருந்து தப்பிச் சென்றோம்.

பின்னர் கொள்ளையடித்த நகைகளை விற்று அந்த பணத்தில் மது குடித்து ஜாலியாக இருந்தோம். கடந்த 11-ந் தேதி கீரநத்தம் பகுதிக்கு சென்றோம். அப்போது அங்கு வயதான முதியவர் நடக்க முடியாமல் தனியாக வசிப்பதை பார்த்தோம். அவரிடம் நிறைய பணம் இருக்கும் என நினைத்து அவரை கொலை செய்தோம்.

அவரது பாக்கெட்டில் ரூ.500 பணம் மட்டுமே இருந்தது. அந்த பணத்தை எடுத்து கொண்டு செல்போனை பறித்து தப்பிச் சென்றோம். செல்போனால் போலீசில் சிக்கக்கூடாது என நினைத்து அந்த செல்போனை சிறிது தூரம் தள்ளி வீசி சென்றோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினர்.

பின்னர் 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...