செங்கல்பட்டில் இருந்து கோவையில் சப்ளை செய்வதற்காக பீர் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று திருப்பூர் அருகே சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பீர் பாட்டில்கள் உடைந்து சேதமாகின. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையோர தடுப்பில் மோதி பீர் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டில் உள்ள பீர் நிறுவனத்திலிருந்து கோவையில் சப்ளை செய்வதற்காக பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரி ஈரோடு, செங்கப்பள்ளி வழியாக கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
இன்று காலை செங்கப்பள்ளி அடுத்த பள்ள கவுண்டம்பாளையம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக இருந்த தடுப்பில் மோதி நிலை தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் வைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் பெட்டிகளில் இருந்த 25 ஆயிரத்து 200 பீர் பாட்டில்கள் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.