கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுனரான ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய கார் ஒன்றை வழங்குவதாகவும், ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள், பல்வேறு தடைகளை உடைத்து தரணியை ஆள வருகையில், பண்பட்ட சமூகமாக நாம் அவர்கள் பக்கம் நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு புதிய கார் ஒன்றை வழங்குவதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல் பண்பாட்டு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.
பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காக பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்.
தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்திய விவாதம் என் கவனத்திற்கு வந்தது மிகுந்த வேதனை அடைந்தேன்.
ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை.
கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடர இருக்கிறார்.
ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆள வருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.