திருப்பூர் அருகே தனது மனைவியுடன் தொடர்பில் இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி பவன் யாதவ்-யை, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்தரதாரி என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன் யாதவ், திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்தரதாரி, திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி, டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், உபேந்தரதாரி மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவிற்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு பவன் யாதவ் வீட்டிற்கு சென்ற உபேந்தரதாரி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரடைந்த உபேந்தரதாரி தான் கையில் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவை தலை, கை என சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதில் பலத்த இரத்த காயமடைந்த பவன் யாதவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பவன்யாதவ் இன்று காலை உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குபதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார், தப்பி சென்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்தரதாரியை தேடி வருகின்றனர்.