ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தொழிலை இழிவுபடுத்தும் வகையில் ஓவியங்கள் வரைந்துள்ளதாக குற்றம்சாட்டி கோவை காந்திபுரம் மேம்பால தூணில் வரையப்பட்டிருந்த கண்ணகி ஓவியம் மீது கருப்பு மை ஊற்றி அழித்த விஸ்வ ஜன முன்னேற்ற கழக நிறுவனர் வேல்முருகன் என்பவர் கைது.
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள தூண்களில் அரசியல் கட்சியினர் மற்றும் விளம்பர போஸ்டர்கள் எச்சரிக்கையை மீறி ஒட்டிவந்ததால் மாநகரின் அழகு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், போஸ்டர் ஒட்டுவதில் அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு வந்தது.
இதனை கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சி சார்பில்மேம்பாலங்களில் உள்ள தூண்களில் ஐம்பெரும் காப்பியமான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐம்பெரும் காப்பியங்கள் வரும் காட்சிகளை ஓவியங்களாக வரையும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனை பார்த்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் ஐம்பெரும் காப்பியங்களில் வரும் கதையை அறிவதற்கான வாய்ப்பாக அது அமைந்து இருந்தது. இந்நிலையில், ஒரு சமூகத்தைச் (விஸ்வகர்மா) சேர்ந்த சிலர் இந்த ஓவியங்களுக்கு கண்டனம் தெரிவித்துவந்தனர்.
மாநகராட்சிப் பகுதியில் உள்ள தூண்களில் வரைந்திருந்த படங்களில் சில பொற்கொல்லர்களின் வேலைபாடுகளும் இடம்பெற்றிருந்தன. இது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த தொழிலை இழிவுபடுத்தும் வகையில் தவறாக சித்தரித்து ஓவியங்கள் வரைந்துள்ளதாக குற்றம்சாட்டி, விஸ்வ ஜன முன்னேற்ற கழக நிறுவனர் வேல்முருகன் என்பவர் கருப்பு மை ஊற்றி ஓவியங்களை அழித்தார்.
கோவை மாநகர மைய பகுதியில் மட்டும் 4 லட்சம் நகைத்தொழில் செய்யும் மக்கள் உள்ளதாகவும், பல நல்ல திட்டங்களைசெய்துகொண்டு இருக்கும்திமுகவின் பெயரைக் கெடுக்கும் விதமாக கோவை மாவட்டம் நிர்வாகம் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், வேறு எவரேனும் தூண்டுதலில் இதை செய்கிறார்களா ? என்றும்வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தூண்களில் வரையப்பட்ட கண்ணகி ஓவியம் உள்ளிட்டவற்றை தார் ஊற்றி அழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார், வேல்முருகனை (TNPPDL)பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது சிறையில் அடைத்துள்ளனர்.