ஒரிசாவில் இருந்து திருப்பூர் வழியாக கோவைக்கு கஞ்சா கடத்தி சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர்: ஒரிசாவில் இருந்து திருப்பூர் வழியாக கோவைக்கு கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சாலை மார்க்கமாகவும் ரயில் போக்குவரத்து மூலமாகவும் கஞ்சா கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் பிளாட்பாரம் முடிவுறும் இடத்தில் இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து வந்துள்ளனர். அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் கொண்டு வந்த பையில் பெரிய பிளாஸ்டிக் பொட்டலங்கள் இருப்பதை கண்ட போலீசார், அதனை சோதனையிட்டதில், அந்தப் பைகளில் கஞ்சா இருந்ததும் வாசம் தெரியாமல் இருக்க பிளாஸ்டிக் டேப்பை கொண்டு முழுவதும் சுற்றி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுவிலக்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த முகமது ரகுப்(22) மற்றும் அல்தாப்(19) என தெரிய வந்தது.
மேலும், ஒரிசா மாநிலம், பிரம்மப்பூர் பகுதியில் இருந்து கேரளா செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்திச் சென்று கோவையில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க இருந்துள்ளனர். கோவை ரயில் நிலையத்தில் அதிக அளவு பாதுகாப்பு இருப்பதால் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் திருப்பூரில் இறங்கி பேருந்து மூலம் கோவை செல்ல திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.