கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
கோவை: கோவை மாநகரை அழகுற மாற்றும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் மீடியாடவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இவ்விரு பணிகளும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில், தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்தப் பகுதிகளில் அ, ஆ, இ, ஈ என தமிழ் எழுத்துகளை பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டியில் தமிழ்மொழி உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அ, ஆ, இ, ஈ என்ற எழுத்துகளை பதிக்கின்றோம்.
இதன் மூலம் இப்பகுதியில் எப்படி வந்தாலும் மேல்இருந்தும்., கீழே இருந்தும் எழுத்துகளை முழுமையாக படிக்க முடியும்.
குழந்தைகள் இவ்வெழுத்துகளை எளிமையாக படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், மாலை நேரங்களில் ஒளிரும் விளக்குகளில் இந்த எழுத்துக்கள் பிரகாசமாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுவருகிறது. அடுத்த வார இறுதிக்குள் இந்தப் பணிகள் முழுமை பெற்றுவிடும், என்றனர்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பாக அவ்வப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவை மக்கள் இவற்றின் முழுமையான வடிவை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.