கோவையில் மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏஐடியுசி சங்கத்தினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். 240 நாட்கள் பணிபுரிந்தாலும் பணி நிரந்தரம், என்டிசி ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.