தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தலில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த மாதிரியான மாணவர் மன்ற தேர்தல் மூலம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்று ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அருகே பள்ளி மாணவர்களிடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், ஜனநாயக முறைப்படி மாணவர்கள் அவர்களது பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் மன்ற தேர்தல் நடத்தப்பட்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
பீளமேடு அடுத்த மசக்காளிபாளையத்தில் மாநகராட்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 420 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம், ஸ்மார்ட் டீச்சிங் என தனியார் பள்ளிகளுக்கு நிகரான பல்வேறு கற்பித்தல் வசதிகள் பின்பற்றப்பட்டு, தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளது இந்த பள்ளி என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில், இந்த பள்ளியின் மாணவர் தலைவர், துணை தலைவரை தேர்வு செய்யும் பொருட்டு, மாணவர் மன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில், அப்பள்ளியில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள், தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர்.
இன்று காலை துவங்கிய தேர்தலில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக ஆசிரியரிடம் கொண்டுச் செல்வதை விட மாணவர்களின் பிரதிநிதி மூலம் கொண்டுச் செல்லும் போது ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும், இந்த மாதிரியான மாணவர் மன்ற தேர்தல் மூலம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்றும் ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.