அவரது கோரிக்கைகளை கேட்டறிந்த ரயில்வே வாரிய தலைவர், உடனடியாக தென்னக ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார்.
கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் இன்று (03/08/2022) ரயில்வே வாரிய தலைவர் வினய்குமார் திரிபாத்தியை, டெல்லி ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
கோரிக்கைகள்
- பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் மீட்டர் தளத்திலிருந்து அகல ரயில் பாதையாக மாறுவதற்கு முன் இருந்த ரயில்களை, மீண்டும் இயக்க வேண்டும்.
- கோவை ரயில் நிலையத்தில் ரயில்களின் பணிக் கொள்ளளவை பூர்த்தி செய்ததால், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போத்தனூர் சந்திப்பை, கோவை சந்திப்பிற்கு நிகராக துணை ரயில் நிலையமாக அமைக்க வேண்டும்.
- பொள்ளாச்சியில் இருந்து விவசாயிகள் பெரும் அளவு பயன்பெற மும்பை வழியாக டெல்லி வரை கிசான் ரயில் இயக்க வேண்டும், என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.
பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்த ரயில்வே வாரிய தலைவர், உடனடியாக தென்னக ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.