கோவையில் கம்பியூட்டர் விற்பனை நிறுவன உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை: கோவை, தடாகத்தை அடுத்த சோமையனூர் வி.கே.வி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (38). இவர் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 30-ந்தேதி குடும்பத்துடன், சாய்பாபா காலணி வெங்கடாபுரம் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார், உடனடியாக அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, உள்ளே இருந்த மரபீரோ உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கண்ணன் இதுகுறித்து தடாகம் போலீஸில் புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கைரேக தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.