கோவை மாவட்ட வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில், இப்பணிக்காக பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் பேசுகையில் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுவதை தவிர்க்கும் பொருட்டு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இன்று முதல் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனை இணைப்பதற்கு கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஓட்டு சாவடி நிலைய அலுவலர் வழங்கும் 6B படிவத்தை பூர்த்தி செய்து வழங்கியோ அல்லது www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது VOTER HELP LINE செயலி மூலமோ சுயமாக ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ சேவை மையங்களை அணுகியும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் எனவும், ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை படிவம் 6B உடன் இணைத்து சமர்ப்பிக்கலாம் என தெரிவித்தார்.
மேலும் இப்பணிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.