இரண்டு மாத சஸ்பெண்ட் முடிந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாமன்ற கூட்டத்தில் கருப்பு சட்டை அணியாமல் வெள்ளை நிற உடையுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது இது முதன்முறையாகும்.
கோவை: கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருக்குறள் வாசித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல் முறையாக மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஆணையாளர் பிரதாப்புக்கு மேயர் கல்பனா மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
5-வது கூட்டத்தில் 8வது வார்டு உறுப்பினர் விஜயகுமார், 11-வார்டு பழனிச்சாமி சிறவை சிவா, 32- வார்டு பார்த்திபன், 38-வார்டு ஷர்மிளா, 50-வார்டு கீதா, 56-வார்டு கிருஷ்ணமூர்த்தி, 91-வார்டு ராஜேந்திரன், 9-வார்டு சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களது வார்டுகளில் உள்ள குடிநீர் இணைப்பு, சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இக்கூட்டத்தில், இரண்டு மாத சஸ்பெண்ட் முடிந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த மாமன்ற கூட்டத்தில் கருப்பு சட்டை அணியாமல் வெள்ளை நிற உடையுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது இது முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன்ற கூட்டத்தில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர் 44-வது ஒலிம்பியாட் போட்டியை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். 18-மாதங்கள் நடக்க வேண்டிய பணிகளை 4-மாதங்களில் முடித்து காட்டியுள்ளார். இது இந்தியாவிற்கு பெருமை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து மண்டலங்களிலும் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதார பணியாளர்களை புதிதாக நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கிழக்கு மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக் பேசும் போது:-
விமான நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கழிவுநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இது மழைக்காலங்களில் ஊருக்குள் போகும் வாய்ப்புள்ளது. இதனால், டெங்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 55-வது வார்டில் அவிநாசி சாலை செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.
வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பேசும் போது:-
வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்படும் போது அந்த பகுதியில் உள்ள மற்ற குழாய்கள் உடைந்து சேதமடைகிறது. இதனால், அடிக்கடி நீர் வெளியேறுகிறது. எனவே, அதனை சரி செய்ய வேண்டும். மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மேயர் வீட்டுக்கு ஒரு கோடி செலவு செய்யப்பட்டு பணம் வீணாக்கப்படுகிறது என அ.தி.மு.க கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.
அதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கல்வி குழு தலைவர் மாலதி பேசும்போது பூங்காக்கள் கல்வி விளையாட்டு மைதானம் எங்களது குழுவில் உள்ளது. ஆனால் தற்போது மாமன்ற செயலாளர் கல்வி மட்டும் தான் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் எங்களுக்கு வராது என கூறுகிறார்.
இது எங்கள் உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே இதற்கு உடனடி தீர்வு வேண்டும் என்றார் இதனால், மாவட்ட கூட்டத்தில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மேயர் 4 நாட்களில் இதற்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதேபோல் கோவை மாநகரில் கடந்த 3 மாத காலத்தில் மட்டும் ரூபாய் 161 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.