மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சீரமைக்கப்படவில்லை. பேட்ச் ஒர்க் கூட செய்யப்படாததால் இவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்து பயத்தில் பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் - பொதுமக்கள்.
கோவை: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேரன் மாநகர் முதல் விளாங்குறிச்சி வரை செல்லும் சாலையில் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டாதது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலை..!
ஹோப் காலேஜ் முதல் விளாங்குறிச்சி வரையிலான சாலை, அவிநாசி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் சத்தி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டை சென்றடைய பெரிதும் உதவி வருகிறது. இந்த சாலை, சேரன் மாநகர் அருகே உள்ள பகுதி வரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்குப் பின் தொடர்ந்து வலது புரம் விளாங்குறிச்சி நோக்கி செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
சேரன் மாநகர் அருகே மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலை நிறைவடையும் பகுதிக்குப்பின் தொடரும் சாலை, அன்னூர் உட்கோட்டை எல்லைப் பகுதிக்குள் வருகிறது.
இந்த சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதால், இந்த சாலையில் பயணிக்கவே முடியாத அவல நிலையில் காட்சியளிக்கிறது.
பெரும்பாலான, மக்களுக்கு இந்த சாலை மாநில நெடுஞ்சாலை என்று கூட தெரியாத அளவுக்கு சிதிலமடைந்து, பயணிக்க தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது என்பதே நிதர்சனம்.
குமுறும் பொதுமக்கள்...!
சேரன் மாநகர் அருகே தொடங்கி சத்தி ரோடு சென்றடையும் வரை விநாயகபுரம் வழி மற்றும் விளாங்குறிச்சி வழி என இரு வழித்தடங்களில், மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை அமைந்துள்ளது. இந்த சாலை புனரமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றால் நம்ப முடிகிறதா...?
பொதுவாக மாநில நெடுஞ்சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சீரமைக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு வேளை சீரமைத்து ஒரே வாரத்தில் அந்த சாலை சிதிலமடைந்தால், உடனடியாக சாலையில் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டும் என்பது தான் முறை. மாறாக, மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இந்த சாலை 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சீரமைக்கப்படவில்லை.
எந்த விதமான பேட்ச் ஒர்க்கும் செய்யப்படவில்லை. இதனால், இவ்வழியாக தினமும் வாகனங்களில் செல்பவர்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மரண பயத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்.
தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில், மழை பெய்தால் இந்த சாலையின் நிலையை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மோசமாக உள்ளது. குறிப்பாக, காலை மற்றும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்வோர் மற்றும் வீடு திரும்புவோர், இந்த குண்டும் குழியுமான சாலையில், மிகுந்த அச்சத்தில் பயணிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
தரமற்ற சாலைகளால் விபத்து, உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், பலமுறை இந்த சாலையின் அவல நிலை குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இனியும் தாமதிக்காமல் சமந்தப்பட்ட துறையினர் இந்த சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் வேலைகளை துவங்க வேண்டும் என்பதே எங்கள் ஒருமித்த கோரிக்கை", என்கின்றனர் பொதுமக்கள்.