மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையிலும், கோவை 22 மற்றும் 8 வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கோவை: விரிவுபடுத்தப்பட்ட, கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தின் கீழ் சேரன் மாநகர், நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
மாநகராட்சி 22 மற்றும் 8 வது வார்டு என இரண்டு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர் மழை காரணமாக, பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில், சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படாதது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக, சமந்தப்பட்ட கவுன்சிலர் அலுவலகத்தில் புகார்களை தெரிவிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறி உள்ளது என்பதே நிதர்சனம் என்று தெரிவிக்கும் மக்கள், பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தும் முன் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரச்சனை குறித்து கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு மற்றும் 8 வது வார்டு கவுன்சிலர் விஜய் ஆகியோர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 22 வது வார்டு, 8 வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது உண்மைதான்.
சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 10, 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே ஏழு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
52 லட்சம் லிட்டருக்கு பதில் 36 லட்சம் லிட்டர் மட்டுமே குடிநீர் வழங்கல்..!
அனைத்து பகுதிகளுக்கும் ஏழு நாட்களுக்கு ஒரு முறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம். அதிகாரிகளும், தீர்வு காண தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட மூன்று வார்டுகளுக்கு சேர்த்து முன்பு 52 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 36 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. கள நிலவரம் குறித்து பல மக்களுக்கு தெரியவில்லை.
மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இதன் காரணமாகவே, 22 வது வார்டு மற்றும் 8 வது வார்டு பகுதிகளில், மாநகர மேயர், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர். விரைவில், வாரம் ஒரு முறை அனைத்து பகுதிகளுக்கும் சீரான சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.