தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
கோவை: கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு கோவை காந்திபுரம் பகுதியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட 12-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டி மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதில், கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி மாநகர போலீசில் மனு அளித்தனர். ஆனால் ஶ்ரீமதி மரணம் தொடர்பான போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் கூடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் போலீஸ் தடையை மீறி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பிகண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 10 க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.