திருப்பூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், வாடிவாசல் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், வாடிவாசல் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அலகுமலையில் வரும் 18-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடக்கிறது. மேலும், ஒரேநேரத்தில் சுமார் 8 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய வகையில் இருக்கைகள் மற்றும் இருபுறமும் தடுப்பு வேலிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாடிவாசல் அமைக்கும் பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன் பார்வையிட்டார். ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தையும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், முதல்முறையாக திருப்பூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 800 காளைகள் பங்குபெற உள்ளது. நிகழ்ச்சியைக் காண 1 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பழனிச்சாமி, காவல்துறை கண்காணிப்பாளர் உமா, முன்னாள் அமைச்சர் ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள், அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.