நீலகிரி மாவட்டத்தில் திடீரென பெய்த பரவலான மழையால், விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி : கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் பரவலான மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த இரு மாதங்களாக நீலகிரியில் கடும் பனிபொழிவு நிலவி வந்தது. இதனால், வனங்களில் பசுமை குறைந்து வறட்சி தலைதூக்கியது. விவசாய நிலங்களிலும் வறட்சி ஏற்பட்டதால் விவசாயிகள் மழையை எதிர் நோக்கி காத்திருந்தனர். கடந்து இரு தினங்களுக்கு முன்பு இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மதியம் உதகை, கோத்தகிரி, முதுமலை பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் கன மழை பெய்ததால், வறட்சியின் பிடியிலிருந்த முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வந்த வனத் தீ அபாயம் நீங்கியது.
முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள், மசினகுடி வனப்பகுதியிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக பூமி நனைந்து பகல் நேரத்தில் நிலவி வந்த வெட்பம் தணிந்து ரம்மியமான காலநிலை நிலவியது. இதை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர். மழை பெய்ததால், விவசாயிகள் விதைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை தொடரும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களில் நீர்இருப்பு அதிகரித்து, கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.