கோவை, டிசம்பர் 14
பாரதியார் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடைபெறும் ”சர்வதேச உயிர் அறிவியல் மற்றும் தாவரவியல்” மாநாட்டைத் துணைவேந்தர் ஆ.கணபதி தொடங்கி வைத்தார்.
பல்கலைக் கழகத்தின் உயிர்வேதியல், உயிர் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரி தொழில்நுட்பவியல் மற்றும் உயிர் தகவியல் ஆகிய 4 அறிவியல் துறைகள் இணைந்து பிரம்மாண்டமான ”சர்வதேச உயிர் அறிவியல் மற்றும் தாவரவியல் மாநாடு” தொடங்கப்பட்டது. விழாவினைத் தொடங்கி வைத்த துணைவேந்தர் ஆ.கணபதி பேசுகையில், அறிவியல் துறைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொணர்ந்து அனைத்து ஆராய்ச்சியாளர்களின் கலந்துரையாடலுக்கு வழிவகுத்த இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பாராட்டுகள். அடுத்த தலைமுறை ஆய்விற்கான பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த வந்தி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கும் பாலமாக இந்த மாநாடு அமையும். என்றார்.
இதைத்தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன் பேசுகையில், பல்துறை ஆராய்ச்சி தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கும், மனித நோய்களை முறியடிக்கும் வழிகளுக்கும் தேவையான வழிமுறையாகும். எனக் கூறினார்.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், அவர்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து, அங்கிருந்த ஆய்வாளர்களோடு கலந்துரையாடுகின்றனர். தொடர்ந்து, அடுத்து வரும் இரண்டு நாட்களும் இந்த அறிவியல் ஆய்வு மாநாட்டில் சுமார் 169 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இம்மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.