கோவையில் தற்கொலை முயற்சியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி பானுமதி (30). இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 18-ம் தேதியன்று குடும்ப பிரச்சனை காரணமாக பானுமதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த பானுமதி அக்டோபர் 19ம் தேதியன்று மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல கண்கள், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்டவை அதே மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.