பல்லடம் பிஏபி வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை இரு நாட்களைக் கடந்தும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பிரதீப் (34), விஜயன் (35), மாரியப்பன் (30), சுதாகர் (29), அன்பழகன் ஆகியோர் கொடைக்கானலிற்கு சுற்றுலா சென்றுவிட்டு கடந்த அக்டோபர் 15ம் தேதியன்று கோவைக்கு திரும்பி காரின் மூலம் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பகுதியில் சாலையின் திருப்பத்தில் கார் திரும்பும் போது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிரதீப், விஜயன், மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர். அன்பழகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சுதாகர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த இரு நாட்களாக தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுதாகர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பிஏபி வாய்க்காலில் நீர் அதிகளவில் உள்ளதால் சுதாகரின் உடல் வாய்க்காலின் அடிப்பகுதியில் உள்ள பாறை இடுக்கில் மாட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் பணி நடைபெறுகிறது. இன்று உடல் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.முத்தையா கூறுகையில், "இரவு நேரங்களில் கள்ளிப்பாளையம் பகுதியில் இந்த சாலையை கடப்பதே மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. அறிவிப்பு பலகை எதுவும் இல்லாத காரணத்தால் வாய்க்கால் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. மேலும், இங்கு தெருவிளக்குகளும் இல்லை. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் புகார் அளிக்கப்படவுள்ளது" என்றார்.