தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், ஆண்டு முழுவதும் உழைத்த ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் போனஸ் வழங்கி மகிழ்வித்து வருகின்றன. இந்த சூழலில், குடிமகன்கள் பலர் போனஸ் பணத்தை பெற்ற கையோடு, அதனை மதுவுக்கு செலவு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், போனஸ் பணத்தை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டுமே தவிர, மதுபானக்கடைக்கு அல்ல என்பதை வலியுறுத்தி ஈரநெஞ்சம் தன்னார்வ அமைப்பு சார்பில் 'நம் வீடு நம் பண்டிகை' என்ற பெயரில் கோவையின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து ஈர நெஞ்சம் அமைப்பின் நிறுவனர் மகேந்திரன் கூறியதாவது :- தீபாவளி பண்டிகை என்பது அனைவருக்கும் போனஸ் கிடைக்கும் நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் காலம். ஆனால், இன்னும் சில வீடுகளிலோ குடும்ப தலைவன் வாங்கும் போனஸ் சரியாக அவர்கள் குடும்பத்தில் போய் சேர்வதில்லை. இதற்கு காரணம் குடிப்பழக்கம். வாங்கும் சம்பளம் மற்றும் போனஸ் போன்றவற்றை வீட்டில் கொடுத்து மகிழ்ச்சிக்கு வித்திடாமல் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பத்தின் மகிழ்ச்சியை கெடுத்துவிடுகின்றனர்.
இத்தகைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நம் ஈர நெஞ்சம் அறக்கட்டளை "நம் வீடு நம் பண்டிகை" என்னும் தலைப்பில் கோவை பெரியார் நகர், சிவானந்தாகாலனி உள்ளிட்ட பகுதிகளில் தெருவோர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், அதனால் குடும்பத்திற்கு ஏற்படும் துன்பங்கள், குழந்தைகளுக்கும் சுற்றியுள்ளோர்களுக்கும் ஏற்படும் விளைவுகள் மற்றும் குடிப்பழக்கத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டது. குடிப்பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் எங்கள் அமைப்பை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.