கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளில் இன்று காந்திஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மாவுத்தம்பதி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கத்தினை அக்டோபர் 1 முதல் 15 வரை சிறப்பாக கொண்டாடுதல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், சமூக தணிக்கை, மகளிர் திட்டம் ஆகிய கூட்டப்பொருள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பின்னர், கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாது:-
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை மோட்டார் மற்றும் முறையற்ற இணைப்புகள் மூலம் பெறாமல் அனைவரும் குடிநீர் பெறும் வகையில் உபயோகிக்க வேண்டும். குடிநீர் தேக்க தொட்டிகள் மற்றும் பொதுகுழாய்கள் அருகில் குளித்தல், துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
மழை காலங்களில் தொற்று நோய் பரவா வண்ணம் சரியான அளவில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தேவையான அளவு ஊராட்சிகளில் உறுதி செய்திட வேண்டும். நியாய விலைக்கடைகளில் போதுமான அளவு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊரக பகுதிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் தேங்காமல் சுற்றுபுறங்களை சுகாதார முறையில் பராமரித்திட வேண்டும்.
கழிப்பறை கட்டுதல் மற்றும் அதனை தொடாந்து பயன்படுத்துதல் குறித்தும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக உருவாகுதற்கான தகுதிகளை குறிப்பிட்ட காலவரைக்குள் அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகர், முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.