அரியலூர் மாவட்டம் உடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் ராஜேந்திரன் (44). இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். கட்டிடத் தொழிலாளியான ராஜேந்திரன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மேஷனாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று சக தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனின் கை மற்றும் கால்களில் வெட்டுப்பட்டது.
இது தொடர்பாக, குட்டிப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை குட்டிப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜேந்திரனின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வெட்டுக்காயமடைந்த ராஜேந்திரனுக்கு அம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து, ராஜேந்திரனின் மனைவி கல்பனா மற்றும் மகன் ராகவன் ஆகியோர் திருச்சூர், கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கும் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராஜேந்திரனின் மகன் ராகவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
என் தந்தைக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டதை அறிந்து உடனடியாக கேரளா விரைந்தோம். அங்குள்ள மருத்துவமனைக்கு தந்தையை அழைத்துச் சென்றேன். காயம் தொடர்பான விவரங்களை கேட்கும் முன் நாங்கள் தமிழர்கள் என்பதை அறிந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் எங்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். அதோடு, இங்கு அறுவை சிகிச்சைக்கான எந்த உபகரணங்களும் இல்லை என்று கூறி தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல கூறினர்.
கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் என் தந்தைக்கு சிகிச்சை அளிக்க ரூ.70 ஆயிரம் கேட்டனர். ஏழ்மை நிலையில் வாழும் எங்களால் அந்த பணத்தை செலுத்த முடியவில்லை.
அதன்பின்னர், எனது தந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை அளிக்க தாமதமானதால் காலில் உள்ள செல்கள் இறந்துவிட்டதாகவும், அதனால் காலை அகற்ற வேண்டும் என்றும் கூறினர்.
தமிழர் என்பதற்காக என் தந்தைக்கு கேரள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்த காரணத்தினால் இப்போது என் தந்தையின் காலை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இதற்கான நிவாரணமும், நீதியும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாகவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு கேரள மருத்துவமனைகள் சிகிச்சை தர மறுத்ததால் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.