18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்தது வருத்தமளிப்பதாகவும், இந்த 18 தொகுதிக்கு இடைத்தேர்தல் வைத்தால் அனைத்திலும் அதிமுக வெற்றி பெறுவது சிரமம் என சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை காமநாயக்கன்பாளையம் பகுதியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியவர்களை தகுதி நீக்கம் செய்தது வருத்தமளிக்கிறது. இந்த தகுதி நீக்கம் அதிமுக-விற்கு பலவீனமாக இருப்பது மட்டுமல்லாமல் அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வைத்தால் அதிமுக வெற்றி பெறுவது சிரமம்.
பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பலமுறை சபாநாயகர் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. அதற்கான தண்டனை தான் இது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும். திமுகவுடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதால் கூட்டணி வைத்தால் தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றி பெற முடியும்.
ஏற்கனவே தினகரனுக்கு ஆதரவாக தான் பேசிவந்தேன். ஆனால் அவரது நடவடிக்கை திமுக-விற்கு சாதகமாக இருந்ததால் அவர் மீது வைத்த நம்பிக்கை போய்விட்டது. தினகரன் அணியில் இணைந்தால் அமைச்சர் பதவி தருவதாக அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திருப்பூர் சிவசாமி உள்ளிட்டோர் தன்னிடம் பேசினர். ஆனால் தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை"
இவ்வாறு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்தார்.