கோவை விமான நிலையத்தில் இன்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாட்டிறைச்சி வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்படும் முறையற்ற வர்த்தகத்தை தடை செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. முறைப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி கூடங்களுக்கோ, மாட்டிறைச்சி சாப்பிடவோ தடை இல்லை.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நாட்டை பாஜக மதச்சார்புடைய நாடாக காவிமயமாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார். நாடு காவிமயம் ஆவதில் தவறில்லை, பாவிமயம் ஆவதே தவறு. எவ்வளவு தவறான கருத்துகளை முன்னிறுத்தினாலும், மத்திய அரசை அசைக்க முடியாது. திமுகவின் பிரித்தாளும் அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இருவருக்கும் இடம் காலியாக இல்லை. திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா உள்நோக்கம் கொண்டது. ஜிஎஸ்டி சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் நாட்டின் மக்கள் ஒட்டுமொத்தமாக பலன் பெறுவார்கள்.
ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் ஜாமீனில் தான் வெளிவந்து இருக்கிறார். விடுதலை ஆகவில்லை. தினகரன் கட்சி பணியை தொடர்வது குறித்து அதிமுக-வினர் தான் முடிவு செய்ய வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுள்ளவர்கள் அதிகாரத்திற்கு வருவது தமிழக மக்களுக்கு நல்லதல்ல. தினகரனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் அதிமுக அமைச்சர்களிடம் சங்கடம் உள்ளது" என்றார்.
இதனைத்தொர்ந்து, குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக, பாஜக-விற்கு ஆதரவு அளிக்கிறதா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, ஏற்கவே பாஜகவிற்கு போதிய பலம் உள்ளது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறினார்.