மரங்களோடு மனிதத்தையும் வளர்க்கும் மாமனிதர் செல்வகுமாருடன் ஒரு நேர்காணல்


மனிதர்களை நேசிக்க மறக்கும் இந்த காலகட்டத்தில், மரங்களை நேசித்து அதனோடு மனிதத்தையும் வளர்த்துவருகிறார் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த செல்வகுமார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் க்ளர்க்-ஆக பணிபுரியும் இவர், இயற்கையின் மீதான ஆர்வத்தால், அதை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடும் செயல்பட்டு வருகிறார்.  பொது விழாக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மரங்களை காப்பதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறார். அதோடு, இலவசமாக மரக்கன்றுகளையும், துணிப்பைகளையும் வழங்குகின்றார். அப்படியென்ன இயற்கை மீது உங்களுக்கு ஆர்வம் என்ற கேள்விக்கு, அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்ல வேண்டியது இந்த இயற்கையைத்தான் என்று உணர்ச்சிபட பேசுகிறார் இந்த மனிதர்.



தனது வாழ்க்கை பயணம் குறித்து செல்வகுமார் கூறியதாவது :-

பிறந்தோம், இறந்தோம் என்ற மனித வாழ்கை சுயநலத்துடன் தனக்கு தேவையான வகையில் இயற்கையை பயன்படுத்துவதோடு அதை அழித்து வருகிறது. இதை தடுக்கும் முயற்சியே எனது முதற்கட்ட பணி.

சமூகப் பணி

எனது தாய், தந்தை இருவருமே அரசு பணியாளர்கள். சிறு வயது முதலே என் தந்தையின் சமூக செயல்பாடுகளை உற்றுநோக்கி வந்தேன். இயற்கையை காப்பதற்கு அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.  பல இடங்களில் மரங்களை நட்டு அவற்றை வளர்த்ததோடு, மற்றவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி வந்தார். அவரின் மறைவுக்குப்பின் இந்த சமூகப்பணியை நானும் செய்யவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. கடந்த 2010ம் ஆண்டு எனக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிளர்க் வேலை கிடைத்தது. அப்போது எனது மாத வருமானம் ரூ.15 ஆயிரம். முதல் மாத சம்பளம் வாங்கியதும் எனது சமூகப்பணியை தொடங்கினேன். சம்பளம் முழுவதற்கும் மரக்கன்றுகளை வாங்கி பொது மக்களுக்கு கொடுத்தேன். 

அவசியம்

மரங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பலரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்திவிட்டு அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிவருகிறேன். மேலும், பிளாஸ்டிக் பயன்பாடுத்த வேண்டாம் என்று கூறி அதன் தீமைகளை எடுத்துரைத்தேன். அலுவலக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று இதை செய்து வருகிறேன்.

என்னதான் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க வேண்டாம் என்று கூறினாலும் மக்களுக்கு மாற்றுவழி இல்லை என்பதை உணர்ந்து துணிப்பைகளை இலவசமாக வழங்கி வருகிறேன். திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உட்பட தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு சென்றுவந்துவிட்டேன். மீதமுள்ள மாவட்டங்களுக்கும் சென்று என் பணியை தொடர்ந்து செய்வேன்.



தூய காற்று இன்றியமையாதது

நாம் குடிக்கும் நீரை விலைக்கு வாங்கவேண்டிய அவலநிலை வரும்  என்று நம் முன்னோர்கள் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று அது நடைமுறையாகிவிட்டது. முன்னோர்கள் நீர்நிலைகளை பாதுக்காக்காமல் விட்டதன் விளைவுதான் இது. இதை நாம் அடுத்த தலைமுறைக்கும் செய்துவிடக்கூடாது. சுவாசிக்க தகுதியற்ற காற்று என்ற நிலை வந்துவிட்டால் இன்று தண்ணீரின் நிலைமைதான் காற்றுக்கும். ஒரு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜனை சுவாசிக்க விலைகொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். அதனால் அடுத்தடுத்த  தலை முறையின் வாழ்கையை நினைத்து நாம் இன்றே அவர்கள் வாழும் சூழலை முறையாக விட்டுச்செல்ல வேண்டும்.

சுமை

சமீப காலமாக பிரத்யேகமாக வடிவமைத்த ஆடை ஒன்றை உடுத்திக்கொண்டு, அதில் 70 வகையான மரக்கன்றுகளை சுமந்து கொண்டு பொது இடங்களில் வலம் வருவேன். என்னை ஆச்சர்யமாக பார்க்கும் மக்களிடத்தில் மரங்கள் நடுவது குறித்து பேசி அவர்களிடம் ஒரு மரக்கன்றை கொடுப்பேன். 70 மரக்கன்றுகளையும் மண்ணையும் உடைபோல் உடுத்திக்கொள்ளும் போது அதன் எடை 100 முதல் 120  கிலோ வரை இருக்கும். நாள்முழுக்க அதை சுமந்து கொண்டு தான் இருப்பேன். ஆனால், ஒரு போதும் அது எனக்கு சுமையாய் தெரியவில்லை. காரணம் ஏதோ ஒரு நல்லது நடக்கும் என்ற ஆசை தான். இதே முறையை பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் போதும் கடைபிடிக்கிறேன். இது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிவிட்டேன்.  

வேண்டாம் சீமை கருவேலம்

சீமை கருவேல மரங்களை அந்நிய நாட்டவர்கள் திட்டமிட்டு நம் நாட்டுக்குள் விதைத்துள்ளனர். ஒரு சீமை கருவேலே மரத்தின் வேர் என்பது, பல கிலோ மீட்டர் ஆழத்திற்கு பூமிக்கடியில் செல்லும், மேலும் தனது வேரை பல இடங்களுக்கும் பரப்பும். இந்த வேர் அதிக ஆழத்திற்கும், பரப்பளவிற்கும் செல்லும்போது நிலத்தில் இருக்கும் நீரை உறிஞ்ச்சி விடுகின்றன. இதனால், நிலத்தடி நீரின் அளவு பெருமளவு குறைந்து வருகிறது. அதோடு, நிலத்தடி நீரில் விஷத்தன்மை கலக்கும் அபாயம் உள்ளது.

இவற்றை எங்கு பார்த்தாலும், அதன் அடிவேரோடு பிடுங்கி எறியுங்கள். கத்தி மற்றும் கோடரியால் வெட்டுவதால் எந்த பயனும் ஏற்படாது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தான் இவ்வகை மரங்கள் அதிகம் உள்ளது.அவற்றை களையெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன்.

நிதி வேண்டாம்

இது போன்ற செயல்களை பார்த்து பலர் எனக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர். ஆனால், எனக்கு நிதி உதவி தேவை இல்லை. இதுபோன்ற சமூகப்பணியை ஊக்குவிக்க நினைப்பவர்கள் மரக்கன்றுகளை வாங்கி மக்களிடம் கொடுத்தால் போதுனமானது.

மரங்களை வளர்த்தி நாட்டுக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் என்னை  தொடர்புகொண்டு மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். ( தொலைபேசி எண் : 7358980773 )

இவ்வாறு அவர் கூறினார்.

இவரின் சேவையை பாராட்டி பல அமைப்புகள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கியுள்ளது. தொடர்ந்து எந்த பிரதிபலனும் இன்றி இப்படியும் சில மனிதர்கள் பொதுநல நோக்கில் பயணிக்கிறார்கள். அவர்களை ஊக்குவிப்பது ஒன்றே நம் ஒவ்வொருவரின் கடமையேயன்றி கேலி செய்வது அல்ல. செல்வகுமார் போன்ற மனிதர்களை பெற்றதற்காக ஒட்டுமொத்த மனிதகுலமும் மார் தட்டிக்கொள்ளலாம்.

 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...