தமிழ்நாடு நாள் விழா - கோவையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள்!

தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு வரும் ஜூலை 12ஆம் தேதி கோவையில் தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாளான சூலை 18ஆம் தேதி “தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி, தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இதன்படி, தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி ராசவீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் மாணவ/மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும்.

ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டிக்கான தலைப்புகள்:

பள்ளி அளவிலான போட்டிகள்

கட்டுரை:-

தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்

பேச்சுப் போட்டி:-

தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்

இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.

போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...