ஆயுத பூஜை தொடர் விடுமுறை: பொள்ளாச்சியில் இருந்து 35 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தொடர் விடுமுறை காரணமாக பொள்ளாச்சியில் இருந்து பழனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் 30ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


கோவை: காலாண்டு தேர்வு நிறைவு மற்றும் ஆயுத பூஜை என தொடர் விடுமுறை காரணமாக பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த ஆண்டில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரை அவ்வப்போது முகூர்த்த நாட்கள் இருந்ததால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 2 வாரமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

இதனிடையே வரும் 30ஆம் தேதியுடன் பள்ளி காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்து அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை என தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அந்த நாட்களில் காந்தி ஜெயந்தி விடுமுறையும் அதன்தொடர்ந்து 4 மற்றும் 5-ந் தேதிகளில் சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து விடுமுறைகள் வருகின்றன.

இதன் காரணமாக வெளியூர் பயணிகள் வசதிக்காக, வரும் 30-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் 5-ந் தேதி வரை என தொடர்ந்து 5 நாட்களும், வழக்கம்போல் இயக்கப்படுவதை விட, பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

அதிலும் குறிப்பாக கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, திருச்சி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 35 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வால்பாறையில் வசிக்கும் பலரும் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றுவதால், சரஸ்வதி பூஜையையொட்டி வால்பாறைக்கு அக்டோபர் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கும், வெகுதூர பகுதிகளுக்கும் என தினமும் 190 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வெகுதூர பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. விசேஷ நாட்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு வரும் 30-ந் தேதி வரை பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறையாக இருந்தாலும், சரஸ்வதி பூஜை பண்டிகை இருப்பதால், பெரும்பாலானோர் குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்வர். இதனால், வெளியூர்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த முறை சரஸ்வதி பூஜை மற்றும் பள்ளி விடுமுறை என்பதால், 35 பேருந்துகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதேபோல கோவையில் இருந்தும் நெல்லை, தென்காசி மதுரை, சேலம், ஊட்டி, உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...