PRANK VIDEO எடுப்பவர்கள் சேனல்கள் முடக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை..!

கோவை மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் PRANK VIDEO எடுப்பவர்கள் மீது புகார் அளித்தால், அவர்கள் மீது குற்றவழக்கு பதியப்பட்டு சேனல் முடக்கப்படும், என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



கோவை: பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிராங்க் வீடியோ ( Prank Video)எடுப்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. பொதுமக்களுக்கு தேவையான நல்ல பயனுள்ள தகவல்களை, நாள்தோறும் நடக்கின்ற நாட்டு நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் தெரிந்து கொள்கின்றோம். தகவல் பரிமாறும் களத்தை கடந்து சமூக வலைதளங்களான யூடியூப் உள்ளிட்டவை லட்சக்கணக்கில் பொருள் ஈட்டும் வணிக தளமாகவும் மாறியிருக்கின்றன.

செய்தி, நாட்டு நடப்பு, அரசியல் கருத்து பரிமாற்று களமாகவும் யூடியூப் வலைதளங்கள் ஒருபுறம் இயங்கி வந்தாலும்,சேட்டை குறும்பு தனங்களாலும் இணையத்தை ஆட்கொண்டு வருகின்றன..குறிப்பாக பிராங் என்ற பெயரில் பொது வெளியில் நடக்கும் வரம்பு மீறல்கள் பொதுமக்களை வெகுவாக பாதித்திருக்கின்றன.

பொதுமக்கள் நடைமேடை, பூங்காக்கள், பொதுமக்கள் சங்கமிக்கும் இடங்கள் என பொது இடங்களில் பிராங் எனும் சேட்டை யூடியூப் சேனல்களை வைத்துக்கொண்டு வாலிபர்கள் வீடியோக்களை எடுக்கின்றனர். இதில், பெண்களும் அடங்குவர். அவ்வாறு பிராங் செய்பவர்கள் செய்யும் சேட்டைகளும், குறுப்புத்தனங்களும் பொதுமக்களை மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதித்திருக்கின்றன.

இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துசெய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், பொதுமக்கள்‌ நடமாட்டம்‌ உள்ள இடங்களாகிய பூங்காக்கள்‌, நடைப்பயிற்சி மைதானங்கள்‌, பள்ளி வளாகங்கள்‌ போன்ற பல பகுதிகளில்‌, தனிநபர்கள்‌ சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில்‌ ஈடுபட்டு, அவற்றை வீடியோக்களாக எடுத்து பிராங்க்வீடியோக்கள்‌ என்ற பெயரில் தங்களுக்கென்று யூ-டியூப்‌ சேனல்‌ வைத்துக்‌ கொண்டு அதில்‌ வெளியிட்டு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

பிராங்க் வீடியோக்கள்‌ என்ற பெயரில்‌ வீடியோ எடுக்கும்‌ பலர்‌, அதை தொழில்முறை ரீதியாக செய்து யூ-டியூப்‌ சேனலில்‌ வெளியிட்டு அதன்‌ வாயிலாக பணமும்‌ சம்பாதித்து வருகிறார்கள்‌.

அமைதியான சூழ்நிலையை விரும்பி. பூங்காக்களை நாடி வருபவர்கள், நடைப்பயிற்சிக்காக மைதானங்களுக்கு வருபவர்கள்‌‌, வணிக வளாகங்கள்‌ மற்றும்‌ பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள்‌, இந்தபிராங்க் வீடியோ எடுப்பவர்களின்‌ செயல்பாடுகளால், மிகுந்த தாக்கத்தையும்‌, அமைதியான சூழ்நிலைகளில்‌ திடீர்‌ பரபரப்பையும்‌ ஏற்படுத்துகின்றன.

சில வீடியோக்களில்‌ நடிப்பவர்கள்‌ பொது வெளியில்‌ முகம் சுழிக்கும்‌ வண்ணம்‌ எதிர்பாலினத்தவரை எதேச்சையாக நடப்பது போல்‌ தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரீகமாக நடிக்கிறார்கள்‌.

திடீரென்று நிகழும்‌ மேற்படி வரம்புமீறிய செயல்களானது, சம்மந்தப்பட்டவர்களுக்கு உடல்ரீதியாக அதிர்ச்சியையும்‌, மனரீதியாக திகைப்பையும்‌ ஏற்படுத்துகிறது. பின்னர்‌, அவர்களிடமே பிராங்க் வீடியோ எடுப்பவர்கள்‌, அதுகுறித்து தெரிவித்து சமாதானம்‌ செய்கின்றனர்‌.

இருப்பினும்‌, இச்செயல்கள்‌ பொது மக்களிடையே, குறிப்பாக வயதானவர்கள்‌ மற்றும்‌ பெண்களிடையே, விரும்பத்தகாத எதிர்‌ விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இவ்வாறு எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோக்கள் யூ-டியூப்‌ சேனல்களில்‌ சம்மந்தப்பட்ட நபரின்‌ அனுமதியின்றியும்‌, அவருக்கு தெரியாமலும்‌ வெளியிடப்படுவதால்‌ அவரது தனிப்பட்ட சுதந்திரம்‌ மற்றும்‌ இயல்பு வாழ்க்கையில்‌ பாதிப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு, பிராங்க் வீடியோ எடுப்பவர்களின்‌ இச்செயலானது, அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது.

கோவை மாநகரிலும்‌, சமீப காலமாகபிராங்க் வீடியோஸ் என்ற பெயரில்‌ பந்தய சாலை போன்ற மக்கள்‌ கூடும்‌ இடங்களில்‌ நடைபெறும்‌ பிராங்க் வீடியோ எடுப்பவர்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்து பொதுமக்களிடையே அதிருப்தியும்‌, புகாரும்‌ எழுந்து வருகிறது.

எனவே, கோவை மாநகரில்‌ எவரேனும்‌ பிராங்க் வீடியோ எடுத்தல்‌ என்ற விதத்தில்‌ பொதுமக்களின்‌ தனிப்பட்ட சுதந்திரத்திற்கும்‌ அவர்களது இயல்பு வாழ்க்கைக்கும்‌ பாதிப்பு உண்டாக்கும்‌ வகையில்‌ நடந்து கொண்டாலோ அல்லது அதுபற்றிய புகார்‌ வரப்பட்டாலோ உடனடியாக சம்மந்தப்பட்ட நபர்‌(கள்‌) மீது குற்றவழக்கு பதிவு செய்யப்படுவதுடன்‌, அவரது யூடியூப் சேனலும்‌ முடக்கப்படும்‌.

மேலும்‌, புகார்‌ தெரிவிக்கப்பட்ட நபர்களின்‌ மீது தெரிவிக்கப்படும்‌ குற்றச்சாட்டுகளின்‌ அடிப்படையில்‌ இந்திய தண்டனைச்‌ சட்டத்தின்‌ பிரிவுகளின்‌ கீழ்‌ மட்டுமின்றி, தகவல்‌ தொழில்நுட்ப சட்டம்‌ உள்ளிட்ட பிற சிறப்பு சட்டப்‌ பிரிவுகளின்‌ கீழும்‌ வழக்கு தொடரப்பட்டு கடும்‌ சட்ட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌ என்று, மாநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால்,  பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்த யூடியூப் சேனல்கள் பீதியில் உறைந்து உள்ளனர். இது பிராங்கான அறிவிப்பாக இருக்க கூட்டாதா என்று பிரான்கர்கள் ஏங்கினாலும், ஃபிராங்கான இந்த அறிவிப்பை பொதுமக்கள் பலமாக வரவேற்றிருக்கின்றனர் என்பதே நிதர்சனம். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...