தற்போது, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பூத் சிலிப் இன்னும் அவர்களுக்கு வராததால், தங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று கூட தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கோவை: கோவை உக்கடம் புல்லுகாடு பகுதியில் அரசு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் கோவை ஸ்மார்ட்சிட்டி பணிகள் மேற்கொள்ளப்படும் போது, பல்வேறு இடங்களில் இருந்த மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டனர். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பூத் சிலிப் இன்னும் அவர்களுக்கு வராததால், தங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று கூட தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தங்கள் பகுதிக்கு எந்த வேட்பாளரும் பிரச்சாரம் மேற்கொள்ள வரவில்லை எனவும் தங்களுக்கு எந்த வார்டில் ஓட்டு உள்ளது என்று கூட தெரியவில்லை என்றும் இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்ட போது, பதில் அளிக்காமல் தட்டி கழிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, இன்னும் வாக்களிக்க ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தங்கள் பகுதி எந்த வார்டுக்கு உட்பட்டது? எங்கு ஓட்டு உள்ளது? யார் இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள்? என்று உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே போன்று பல்வேறு குழப்பங்கள் இருந்ததால், இறுதியில் வாக்களிக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.