ஓட்டுக்குப் பணம் கொடுக்கவில்லை என்றால் நல்லவர்கள் பக்கம் மக்கள் நிற்பார்கள் எனவும், மக்களின் வறுமையைப் பயன்படுத்தி பணம் கொடுத்து வாக்குகளைச் சேகரிப்பதாகவும் தெரிவித்தார்.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மக்கள் அனைவரும் தேமுதிகவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். கேப்டன் விஜயகாந்த் கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்தவர் என தெரிவித்தார்.
இன்று பணபலம் அதிகாரபலம் ஆட்சி பலம் என பலகை உள்ளது. கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தற்பொழுதுள்ள அமைச்சரும் 2000, 4000 என பணத்தில் தான் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்களே தவிர மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா என்றால் அதற்குப் பதில் இல்லை என தெரிவித்தார்.
டிபன் பாக்ஸ் கொடுப்பது அதற்குள் பணம் வைத்துக் கொடுப்பது என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் மக்களை ஏமாற்றுவார்கள். இங்கு நல்ல சாலை வசதி இல்லை ஆனால் ஓட்டுக்கு காசு கொடுக்கும் போது மட்டும் முன்னால் வந்து நிற்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைத் தான் இவர்கள் ஊக்கப் படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்தார். கடந்த 50 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் தான் தமிழகத்தை ஆட்சி செய்தது ஆனால் முன்னேற்றம் என்பது இல்லை என தெரிவித்த அவர் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டனர் எனவும் தெரிவித்தார்.
ஓட்டுக்குப் பணம் கொடுக்கவில்லை என்றால் நல்லவர்கள் பக்கம் தான் மக்கள் நிற்பார்கள் எனவும் தெரிவித்தார். மக்களின் வறுமையைப் பயன்படுத்தி பணம் கொடுத்து வாக்குகளைச் சேகரிப்பதாகவும் தெரிவித்தார். தற்பொழுது மக்களின் எஜமானர்கள் எங்களின் வேட்பாளர்களை கேப்டன் நேரடியாக வந்து நிற்பது போல் நினைத்துக் கொண்டு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பிரச்சாரத்தின் பொழுது 85 வது வார்டு அவைத்தலைவரின் குழந்தைக்கு சம்யுக்தா என பெயர் சூட்டினார். மேலும் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தொடர்ந்து உழைத்தால் அதற்கான பலனும் கிடைக்கும் எனவும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று தலைமைச் செயலகத்திற்கு வந்து தலைவரைச் சந்திக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள் அவருக்குப் பொன்னாடைகளை வழங்கினர் அதனைப் பிரச்சார வாகனத்திலிருந்த படியே பெற்றுக்கொண்டார்.