கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கோவை: ஓட்டுக்கு பணம், பொருட்கள் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே தர்ணாவில் ஈடுபட்ட ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.
நகர் புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பல்வேரு இடங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் வாக்காளர்களுக்கு குக்கர், ஹாட்பாக்ஸ் போன்ற பொருட்களை பரிசுபொருட்களாக வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே, கோவை மாநகராட்சி நகர்புற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வரும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஈஸ்வரன் உள்ளிட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு என்ற வாசகம் உள்ள பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் சமரசம் பேசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயற்சி செய்தனர்.
இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்க நிறுவனர் ஈஸ்வரன் உள்பட 7 பேரை காவல்துறை வாகனத்தில் கைது செய்தனர்.
அப்போது, வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து, அதனை தடுக்க வேண்டும் என போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினரின் அடக்குமுறையை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூங்கி சென்று கைது செய்தனர்.