ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் 2024 ல் திமுக தலைமையிலான ஆட்சி கலைக்கப்படும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உளறுகிறார். அவர் அரசியல் அமைப்பு சட்டத்தை முதலில் வாசிக்க வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.
கோவை: ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் 2024 ல் திமுக தலைமையிலான ஆட்சி கலைக்கப்படும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உளறுகிறார். அவர் அரசியல் அமைப்பு சட்டத்தை முதலில் வாசிக்க வேண்டும் என கோவை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார கூட்டங்களில் உரையாற்றினார்.
முன்னதாக கோவை இருகூர் பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் எஸ்.ஸ்டாலின் குமார், ராஜேஸ்வரி மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் சந்திரன், லோகநாயகி, காஞ்சனா உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு இருகூர் சந்தை மைதானத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இருகூர் பேரூராட்சியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து பலம் பொருந்திய இருகூர் பேரூராட்சியாக உயர்த்த வாக்களிக்க வேண்டுகிறேன்.
1992 ஆம் ஆண்டுதான் புதிய பஞ்சாயத்து நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் ஐந்தாண்டுகளுக்குக் கட்டாயம் உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்தாண்டுக் காலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சிகளில் அதிகாரிகள் தான் அதிகாரம் செலுத்தி வந்தனர்.
சட்டமன்ற, நாடாளுமன்றத்திற்கு எப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறதோ அதேபோன்று உள்ளாட்சிகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஜனநாயக கடமையைக் கடந்த அதிமுக ஆட்சி நிறைவேற்றவில்லை. இதைப்பற்றிப் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தயாரில்லை.
இதனைவிடுத்து, ஒன்றிய அரசு முன்மொழிகிற ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்துப் பேசுகிறார். 2024ல் திமுக அரசு கலைக்கப்படுமாம், இவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என பேசுகிறார். எடப்பாடி பழனிச்சாமியை நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் முதலில் அரசியல் அமைப்பு சட்டத்தை படித்திருக்கிறீர்களா. அது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா. முதலில் அரசியல் அமைப்பு சட்டத்தைப் படிக்க வேண்டுகிறேன்.
சட்டமன்றத்திற்கு ஒரு கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்திற்கு வந்தால் அது ஐந்தாண்டுக் காலம் முழுமையாக அதிகாரத்தைத் தொடரலாம். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கட்சியோ கூட்டணியோ வெற்றிபெற்று அதிகாரத்திற்கு வந்தால் ஐந்தாண்டுகள் ஆட்சியில் தொடரலாம். இதுகுறித்தெல்லாம் தெரியாமல் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்படும் என்கிறார். அப்படியானால் தற்போது உபி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.
உங்கள் கூற்றுப்படி இன்னும் இரண்டு ஆண்டுகளில் அந்த ஆட்சிகள் கலைக்கப்படுமா. ஏன் இப்படி உளறுகிறீர்கள். கடந்த பத்தாண்டுக் காலமாக அதிமுக ஆட்சியிலிருந்தபோது உங்களால் மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முடிந்ததா. மக்கள் கோரிக்கைகள் ஏதாவது நிறைவேற்றிட முடிந்ததா. மத்தியில் பாஜக அரசு, மாநிலத்தில் உங்களுடைய அதிமுக அரசு. இந்த இரண்டு அரசுகளும் என்ன செய்தது.
மத்தியில் மதவெறி பிடித்த பாசிச பாஜக அரசு மக்களைப் பிளவு படுத்தியது. ஜிஎஸ்டி வரிகளைப் போட்டு தொழில்களை நிலைகுலைய வைத்தது. சிறுகுறு தொழில்கள்தான் கோவை மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இந்த வரிவிதிப்பின் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான சிறுகுறு தொழில்கள் அழிந்து கொண்டிருக்கிறது. விலைவாசி விண்ணை முட்டிக்கொண்டு உயர்ந்துள்ளது.
இவர்கள் கொண்டு வந்த நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒன்றிய அரசுக்கு எடுபிடி அரசாக அதிமுக அரசு கடந்த காலத்தில் செயல்பட்டது. மதவெறி பிடித்த மத்திய அரசு, மக்கள் விரோத அதிமுக மாநில அரசு இந்த இரண்டு அரசுகள் நீடித்தால் தமிழகத்தின் உரிமைகள் முழுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை வீழ்த்தி தமிழகத்தைப் பாதுகாத்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
இதேபோன்று இந்த உள்ளாட்சி அமைப்புகளையும் பாதுகாக்க அதிமுக, பாஜகவை வீழ்த்தி உள்ளாட்சி அமைப்புகளையும் பாதுகாத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். ஒன்றிய அரசு டெல்லியில் இருக்கும், மாநில அரசு சென்னையில் இருக்கும் ஆனால் இந்த லோக்கல்பாடி என்கிற உள்ளாட்சி அமைப்பு நேரிடையாக மக்களுடன் இருக்கும். மக்கள் தூங்கிவிட்டுக் கண்விழித்தால் உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் முன்னாள் நிற்க வேண்டும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உள்ளாட்சிக்குத் தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளின் துணையோடு ஊழல் மலிந்த நிர்வாகமாக மாற்றியது அதிமுக. இவர்களிடம் இருந்து உள்ளாட்சிகளைப் பாதுகாக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றிபெறச்செய்ய வேண்டுகிறேன் என்றார்.
இருகூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுக தலைமைக்குழு உறுப்பினர் சந்திரன், நகர செயலாளர் மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் யு.கே.சிவஞானம், கே.பழனிச்சாமி, சண்முகசுந்தரம், விஜயராகவன்,காங்கிரஸ் கட்சியின் பொன்னுசாமி, விடுதலை சிறுத்தைகள் சந்திரசேகரன், மதிமுக சந்திரசேகர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து சூலூர் பேரூராட்சி மற்றும் கிணத்துக்கிடவு, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.