கோவையில் 70-வது வார்டு வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுத்து வருவதாக, வீடியோ ஆதாரத்துடன் பாஜகவினர் தேர்தல் பறக்கும் படையினருக்குப் புகார் அளித்துள்ள சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை: கோவை 70-வது வார்டு வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுத்து வருவதாக, வீடியோ ஆதாரத்துடன் பாஜகவினர் தேர்தல் பறக்கும் படையினருக்குப் புகார் அளித்துள்ள சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், வார்டு 70 மரக்கடை பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
கோவையில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மறுநாள் மாலையுடன் நிறைவு பெற உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்குகள் சிதறும் நிலையைத் தவிர்க்க, வாக்காளர்களுக்குப் பரிசு பொருள், பணம் கொடுக்கப்பட்டு வருவதாக ஆளுங்கட்சியினர் மீது, அதிமுக மற்றும் பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் கோவை 70 வது வார்டு பகுதியில் திமுகவினர் பணம் பட்டு வாடா செய்து வருவதாகவும், அதை வீடியோ எடுத்து தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த பாஜகவினர், மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
புகரின் பேரில் அங்கு வந்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பணத்தைப் பறிமுதல் செய்து, அந்த நபர்களை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனால், பாஜக மற்றும் திமுகவினர் இடையே கடும் வாக்கு வாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தனது டிவிட்டர் பக்கத்தில், கோவை தெற்கு தொகுதியில் 70 வது வார்டு பகுதியில் வாக்காளருக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்த கருர் கத்துக்குட்டி அதாவது கந்துவட்டி குழுவினை பாஜக தொண்டர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.நியாயமான தேர்தல் நடக்குமா? என்ற கேள்வியுடன் பதிவிட்டுள்ளார்.
இன்று காலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் கொடுக்க ஹாட் பாக்ஸ்சுகள் வைத்துள்ளனர் என்று அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில், அவை பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையின் பல்வேறு வார்டுகளில் திமுகவினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்து வருவதாக அதிமுக மற்றும் பாஜகவினர் தொடர் புகாரை முன்வைத்து வரும் நிலையில், இன்று வார்டு 70 யில் நடைபெற்ற சம்பவம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.