நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்தில் கோவைக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
கோவை: கோவை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவை அருகே உள்ள கொடிசியா மைதானத்தில் 100 வார்டு கான வேட்பாளர் வாக்கு சேகரிப்பு கூட்டம் நடைபெற்றது.
இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்தில் கோவைக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-
தற்போது திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார். அவர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து மூன்று மாதத்தில் ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? கோவை மக்களுக்கு என்ன செய்தார்? என்ன திட்டங்களை வைத்திருக்கிறார். இதனால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது.
பத்திரிக்கை மட்டுமே திமுக அரசை ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கிறது. திமுக அரசுக்கு நாட்டு மக்களைப் பற்றி எந்த ஒரு கவலையும் கிடையாது. அவருடைய ஒரே நோக்கம் அதிமுக கொண்டு வந்த அம்மா திட்டங்களை முழுமையாக முடக்கி வருகிறார். அம்மா சிமெண்ட், அம்மா உணவகம் உட்பட பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து முடக்குவதிலேயே குறியாக இருக்கிறார்.
ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை கொள்ளை எங்கு பார்த்தாலும் குட்கா புகையிலை என தொடர்ந்து பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனால் ஊடகத் துறை சார்பாக அவருக்குச் சிலர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என பாராட்டி விருது வழங்கியுள்ளது.
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்றுவதற்கு வேண்டிய எல்லா வேலைகளும் நடைபெற்று வருகிறது. சதித் திட்டம் தீட்டப்படுகிறது மக்களிடம் நேரிடையாக சென்று மக்களுடைய குறைகளைக் கேட்டு அதிமுக அனைத்தையும் நிறைவேற்றி வந்தது.
ஆனால் திமுக குடும்பத்திற்காக, பேரன் பேத்தி களுக்காகவும் தன்னுடைய கட்சியை நடத்துகிறது. கோவையில் தேர்தல் பொறுப்பாளராக ஒரு அமைச்சரை திமுக அமர்த்தியுள்ளது. அவருடைய வரலாறு என்னவென்றால் இதுவரை 5 கட்சிகளுக்குத் தாவி அவர் தில்லுமுல்லு முறைகேடுகள் எப்படிச் செய்வது என்பதில் கைதேர்ந்தவர்.
மின்சாரம் ஏன் கிடைக்கவில்லை என கேட்டால் மின்வெட்டுக்குக் காரணம் மின்சார வயரில் அணில் செல்வதால் என பதில் கூறுகிறார். அவரெல்லாம் திமுகவில் அமைச்சர்.
கோவை தொழில் துறைகள் நிறைந்த மாவட்டம் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியது அதிமுக. ஆனால் இப்பொழுது திமுக ஆட்சியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு கோவையில் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மூன்று மாத காலத்தில் கிராமப்புறம் வரை 24 மணி நேர மும்முனை மின்சாரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் எப்பொழுது மின்சாரம் வரும் என விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இன்று கோவையில் 70 லாரிகளில் ஹாட் பாக்ஸில் பரிசுப்பொருட்கள் ஓட்டு போடக் கூடிய மக்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது அதை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
திட்டமிட்டு மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டு உள்ளார். அதனால் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொண்டு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். கொள்ளையடிக்கக் கூடிய கொலை செய்யக்கூடிய கட்சி திமுக.
செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஹாட் பாஸ் கொண்டு வந்த லாரிகளை கண்டு பிடித்து போலீசாரிடம் கூறியுள்ளார். லாரி கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல். லாரி தகவல் கொடுத்த எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்யாண சுந்தரத்தை டி சி காரில் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறார். குற்றவாளிகளுக்குத் துணைபோகக் கூடிய வகையில் காவல்துறை செயல்படுகிறது.
காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வந்தது அதிமுக. அரசு தமிழகக் காவல்துறை இவ்வாறு செயல்படுவது வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து வழக்குப் போடுவது தொடர்ந்து வருகிறது. தமிழக முதலமைச்சர் இடம் நீட் தேர்வை யார் கொண்டு வந்தார் என்பது குறித்து நேருக்கு நேர் விவாதம் பண்ணத் தயாரா? என கேட்டோம் இதுவரை எந்தவிதமான பதில் இல்லை. 2010 -ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் கூட்டணியிலிருந்த மத்திய சுகாதார இணை அமைச்சராக இருந்த திமுக அமைச்சர் அவர்களுடைய ஒப்புதலின் பேரில் கொண்டுவரப்பட்டது.
2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்து சீராய்வு மனு போட்டார்கள். அப்பொழுது இந்த ஜெயலலிதா இதைச் செய்யாதீர்கள் தமிழக மக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்று கூறினார். அதற்குக் காங்கிரஸும் திமுகவும் இணைந்து மறுசீராய்வு மனு போட்டு ஒப்புதல் பெற்றது.

இப்பொழுது திமுக அரசு நாடகம் ஆடுகிறது. தொடர்ந்து பொய்களைக் கட்டவிழ்த்துவிட நினைத்தால் கோவை மக்கள் வாக்களிக்காமல் ஓட ஓட அடிப்பார்கள். நாங்கள் புரட்சித்தலைவி அம்மா மற்றும் புரட்சித்தலைவி எம்ஜிஆர் உடைய வழியில் நாங்கள் ஆட்சி செய்தோம்.
இதுவரை அவர்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்னாச்சு ஒன்பது மாதமாக ஏன் பணம் வரவில்லை, என்று உதயநிதி ஸ்டாலினிடம் ஈரோட்டில் மக்கள் கேட்க தொடங்கிவிட்டார்கள். நகை கடன் தள்ளுபடி என கூறினார்கள் 45 லட்சம் பேர் அதில் உள்ளார்கள். இதை முறைப்படி ஆய்வு செய்து வழங்கப்படும் என கூறி 13 லட்சம் பேர்தான் தகுதியுடையவர்கள் என கூறிவிட்டார்கள். 35 லட்சம் பேர் ஏண்டா ஓட்டு போட்டோம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய்யான வாக்குறுதி தரும் கட்சி திமுக, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் நடைபெறக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி 100 அவர்களுக்கும் வெற்றி பெறச் செய்து மீண்டும் கோவை மாவட்டத்தை இக்கோட்டை ஆக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பேசினார்.