தேர்தல் பணிக்காக வந்திருந்த கரூர் திமுகவினர் தங்கிருந்த வீடு மற்றும் கார் மீது நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் 10 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவையில் தேர்தல் பணிக்காக வந்திருந்த கரூர் திமுகவினர் தங்கிருந்த வீடு மற்றும் கார் மீது நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் 10 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதலால் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராகஉள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின், ஆதரவாளர்களான கரூர் மாவட்ட திமுகவினர், கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முகம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் கோவை மாநகராட்சியின் 88 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் சகோதரரான சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான செங்குளம் அருகேயுள்ள தோட்டத்து வீட்டில் நேற்று இரவு தங்கியுள்ளனர்.
இந்த சூழலில், நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த வீட்டின் மீதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலால், வீட்டின் கண்ணாடி, ஜன்னல்கள் மற்றும் கார் கண்ணாடி ஆகியவை சேதமடைந்தது.
இதைத்தொடர்ந்து, கரூர் மாவட்ட திமுகவினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக கோவை மாவட்ட நிர்வாகிகள், காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக நள்ளிரவு முதல் காலை வரை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.