தலைசிறந்த, வரலாற்று மிக்க பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கோவையில் பாஜக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை கொடிசியா அருகே தனியார் விடுதியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய பட்ஜெட் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர், எல். முருகன், "தலைசிறந்த, வரலாற்று மிக்க பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசன் இந்தியா (Vision India), அதாவது அடுத்த 25 வருடங்களில் நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்து பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்த பி.எம் கதிசக்தி திட்டம் (PM GatiShakti)கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், 7 முக்கிய துறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு, நாமக்கல் - முசிரி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதை கொண்டு வரப்பட்டுள்ளது இரயில்வே துறையில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கோதாவரி, பென்னாறு காவேரி நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்தில் நீர் பாசனம் அதிகளவில் கைகொடுக்கும் என தெரிவித்தார்.
மேலும், நதிகள் இணைப்பது சாதாரண செயல் இல்லை எனவும் மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது. தொலைக்காட்சி வாயிலாக 1 முதல் 12 வகுப்பு வரைக்கும் பாடங்கள் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாகவும் அனைவருக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைக்க முடிவு செய்துள்ளோம் எனவும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கக்கூடிய பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.