அவரை தாக்கிய கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் குடும்பத்தார் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: சூலூர் அருகே தகராறு காரணமாக தாக்கப்பட்ட கூலி தொழிலாளி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரை தாக்கிய கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் குடும்பத்தார் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள்,கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் சூலூர் பகுதி பொன்னாகானி அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமு என்பவர் வேலை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, போகம்பட்டி பகுதி சேர்ந்த மயில்சாமி என்பவரது இருசக்கர வாகனம் உரசிச் சென்றதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்த மயில்சாமி அவரது சாதியினரை கொண்டு அடிக்கடி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ராமுவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 20 பேர் கொண்ட கும்பல்,ராமுவின் வீட்டிற்குச் சென்று அவரை தாக்கி இல்லத்தில் இருந்த பொருட்களையும் சேதபடுத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ராமூவை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், ராமூவின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் திராவிடர் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உட்பட அனைத்து கட்சியினர் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கட்டிடம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் .இருப்பினும், தாக்குதல்நடத்தியவர்களை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம், என ராமுவின் உறவினர்கள் காத்திருக்கின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது.
சம்பவம் குறித்து, இரு தினங்களுக்கு முன்பு ராமுவின் மனைவி லட்சுமி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
