கடந்த 10 ஆண்டுகளாக எந்த குறையும் சொல்ல முடியாத, சிறந்த ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனியில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஒ.பன்னீர்செல்வம், கொரோனா தொற்றை அதிமுக அரசு சிறப்பாக கையாண்டது எனவும் திமுக அரசு அதை சரியாக கையாளவில்லை என்று கூறிய அவர், திமுகவினர் ஏதாவது திட்டங்கள் உதவிகள் கொடுத்தார்களா? என கேள்வி எழுப்பினார்.
கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான அதிமுக ஆட்சி நடைபெற்றது எனவும், எந்த குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் போராடி தீர்ப்பினை கொண்டு, அரசாணை பெற்றுக்கொடுத்தவர் ஜெயலலிதா எனவும், 50 ஆண்டுகளில் இல்லாத சாதனையை 5 ஆண்டுகளில் கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் செய்து காட்டியது என்று கூறினார்.
திமுக சட்டமன்ற தேர்தலின் போது, பொய் வாக்குறுதிகளை கொடுத்தது எனவும், 505 வாக்குறுதிகளை திமுக வீதி வீதியாக பிரச்சாரம் செய்தது என்று கூறிய அவர், அதை நம்பிய மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த கட்சி திமுக என்று குற்றம்சாட்டினார்.
திமுகவின் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்றார்கள். இன்னும் செய்யவில்லை எனவும், 5 சவரனுக்கு நகை அடகு வைத்தால் கடன் தள்ளுபடி என்றார்கள். 50 லட்சம் பேர் நகை அடகு வைத்தனர். இப்போது யாருக்கு தகுதி என ஆய்வு செய்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார். 37 லட்சம் பேர் நகைகளை அடகு வைத்து நடுத்தெருவில் இருக்கின்றனர். 13 லட்சம் பேர் மட்டும் தகுதி என்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
அதேபோல, பெண்களுக்கு 1000 ரூபாய் வீடு தோறும் உதவி தொகை வரவில்லை எனவும், அதனால் கடுமையான கோபத்தில் மக்கள் இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். பொங்கல் பரிசாக 2500 ரூபாயுடன் பரிசுப் பொருட்கள் தொகுப்பை அதிமுக அரசு கொடுத்தது எனவும், கொடை வள்ளல் ஸ்டாலின் 5000 கொடுக்க வேண்டும் என்றார். இப்போது அவர் எதுவும் கொடுக்கவில்லை எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பொங்கல் பரிசு பொருட்களை வடநாட்டிலிருந்து வாங்கி இருக்கின்றனர் எனவும், இங்கு வாங்கினால் தெரிந்து விடும் என வட மாநிலத்தில் வாங்கி இருக்கின்றனர் என்று கூறிய அவர், பொங்கலுக்கு மக்களுக்கு கொடுத்த அரிசியை மாட்டிற்கு போட்டால் அந்த மாடு நம்மை முறைக்கிறது என்றார். பொங்கல் பரிசு பொருட்களின் தரம் குறித்து விசாரணை கமிசன் அமைத்து விசாரணை செய்ததில் அது உண்மை என நிரூபணம் ஆகியிருக்கின்றது என அவர் கூறினார்.
பெரியார் கண்ட கனவை நனவாக்கியது ஜெயலலிதா மட்டும் தான் எனவும், உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது ஜெயலலிதா எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் எனவும், அதிமுக ஆட்சி தான் சிறந்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டனர் எனவும் அவர் கூறினார்.
இரட்டை இலை சின்னத்தை நம்பி களத்தில் இருப்பவர்களை வெற்றி பெற வைக்கும் கடமை அதிமுக கட்சியினர் அனைவருக்கும் இருக்கின்றது எனவும், சின்ன சரிவினால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இயற்கையே அதை சரி செய்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கின்றது எனவும், மக்கள் நம்மை ஆதரிக்க தயாராக இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொங்கு மண்டலம் இன்று வரை அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகின்றது எனவும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் எண்ணங்களை ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா எனவும் அவர் கூறினார்.
மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தவர் ஜெயலலிதா எனவும், 5.5 லட்சம் வீடுகளை மக்களுக்கு கட்டிக்கொடுத்தவர் என்று கூறிய அவர், இந்த திட்டங்கள் மக்கள் மனதில் அசைக்க முடியாத திட்டங்களாக இருக்கின்றது எனத் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தடம் பிறழாமல் அவரை தொடர்ந்து செய்து காட்டியது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எனவும், 100 யூனிட் மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், வரிவருவாயில் 3ல் ஒரு பங்கை கல்விக்கு ஒதுக்கியது என பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா எனவும் அவர் தெரிவித்தார்.