திமுகவில் மேயர் வேட்பாளராக களமிறக்கபடுவார் என்று பேசப்பட்ட, கோவை மாவட்ட திமுக மகளிரணி துணைச் செயலாளரான, மீனா ஜெயக்குமாருக்கு எந்த வார்டும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது அவர் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி, திமுக சார்பில் மேயர் வேட்பாளராகத் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மீனா ஜெயக்குமாருக்கு, வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது, அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியலில் மீனா ஜெயகுமார் பெயரில்லை..!
கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 74 பேர் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் 22 வயது மகள் நிவேதா சேனாதிபதிக்கு 97 வது வார்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மனைவி இலக்குமி இளஞ்செல்விக்கு 52 வது வார்டு, மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீனா லோகு ஆகியோர் மற்றும் புது முகங்கள் பலர் என திமுக சார்பில் 74 பேர் கவுன்சிலர் பதவிக்குக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேயர் வேட்பாளராகத் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மீனா ஜெயகுமார்.
இந்த நிலையில், திமுகவில் மேயர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று பேசப்பட்ட, கோவை மாவட்ட திமுக மகளிரணி துணைச் செயலாளரான, மீனா ஜெயக்குமாருக்கு எந்த வார்டும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது அவர் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே, திமுக கூட்டங்களில் மீனா ஜெயக்குமார் தான் மேயர் வேட்பாளர் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேயர் போட்டியில், திமுகவை சேர்ந்த மீனா லோகு, இலக்குமி இளஞ்செல்வி, மீனா ஜெயகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காயத்ரி ஆகியோர் உள்ளனர் என்று பேசப்பட்ட நிலையில், தற்போது மேலே குறிப்பிட்ட பெயர்களில் மீனா ஜெயகுமார் பெயர் மட்டும் விடுபட்டுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
சட்டமன்ற தேர்தலிலும் சீட் இல்லை
முன்னதாக, அவருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் தெற்கு தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் அந்த தொகுதியை திமுக, தன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்குக் கொடுத்தது. கோவை தெற்கு தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயகுமார் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
அன்று ஆரம்பித்த ஏமாற்றம் இன்று வரை நீடித்து வருவதாக, அவர் ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
கனிமொழி அணி
திமுக மகளிரணி தலைவியான கனிமொழி அணியில் முக்கியமான இடத்தில் உள்ள மீனா ஜெயக்குமார், கொரோனா பேரிடர் காலத்தில் தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார் எனவும், இம்முறை கோவைக்குப் பெண் மேயர் என்ற அறிவிப்பு வெளியான உடனே, மீனா ஜெயகுமாருக்குத் தான் இந்த பதிவு என்று அனைவரும் உறுதியாக இருந்தோம்.
இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெறும் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தவறாது மீனா ஜெயக்குமார் பங்கேற்று வந்தார். ஆனால், தற்போது அவர் பெயர் கவுன்சிலர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார், அவரது நெருங்கிய ஆதரவாளர் ஒருவர்.
என்ன ஆச்சு..?
தனக்கு சீட் கன்பார்ம் என்று நம்பிருந்த மீனா ஜெயக்குமார் 57 வது வார்டில் போட்டியிடுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அப்பகுதியில் தேர்தல் அலுவலகம் திறந்ததோடு, மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் சீட் வழங்கப்படவில்லை? கடைசி நேரத்தில் என்ன ஆனது? என்று திமுகவினர் குழப்பத்தில் உள்ளனர்.
அவர் தரப்பு கருத்தைக் கேட்க மீனா ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.