நேர்காணலில் கலந்து கொண்டவர்க்கு வாய்ப்பு வழங்காமல் வேண்டியதை வாங்கி கொண்டு சீட் வழங்கியதாகத் திருப்பூர் மாநகராட்சி 39 வார்டு பகுதியை சேர்ந்த பெண் வாக்குவாதத்தால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: நேர்காணலில் கலந்து கொண்டவர்க்கு வாய்ப்பு வழங்காமல் வேண்டியதை வாங்கி கொண்டு சீட் வழங்கியதாகத் திருப்பூர் மாநகராட்சி 39 வார்டு பகுதியை சேர்ந்த பெண் வாக்குவாதத்தால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தங்கும் விடுதியில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் பல்லடம் நகராட்சி வார்டுகளில் போட்டியிட்டும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மற்றும் பல்லடம் அதிமுக எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்லடம் தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பல்லடம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இக்கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நகர, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 39 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்த அதிமுக தலைமையால் நடத்தப்பட்ட நேர்காணலில் கலந்து கொண்டு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் மனோன்மணி என்ற பெண் திடீர் என கூட்டத்தின் நடுவே எழுந்து நின்று கட்சி நிர்வாகிகளைப் பார்த்து நேர்காணலில் கலந்து கொண்ட தான் உள்பட 5 பெண்களுக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு வேண்டியதை வாங்கி கொண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத பெண் ஒருவருக்குச் சீட்டை வழங்கி விட்டதாகக் கூறி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டார்.

இதனால் கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் கூட்டத்தினரிடையே ஆவேசமாகப் பேசிய அந்த பெண் அங்கிருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுக பல்லடம் தொகுதி எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அப்பெண்ணைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரை சமாதானம் படுத்தினர்.

இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அவசரகதியில் கூட்டத்தை முடித்துக் கொண்டு அதிமுக, எம்எல்ஏகள், கட்சி நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர்.