இளைஞரின் உடல் வாகனத்தில் சிக்கிய நிலையில், இழுத்துச் செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை: கோவையில் மினிடோர் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 29ம் தேதியன்று கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையின் முன்புள்ள பாலத்தில் இருந்து கீழே இறங்கிய இருசக்கர வாகனம், சிட்கோவில் இருந்து வெளியே வந்த மினிடோர் சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த இளைஞர் வடவள்ளி பகுதியை சேர்ந்த நிஷாந்த்ராஜ்(22) என்பதும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இரவு நேரப் பணி முடிந்து வீடு திரும்பும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் மினிடோர் வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், மினிடோர் வாகனம் இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இருசக்கர வாகனம் மோதியது தெரிந்தும் நிறுத்தாமல் சென்ற மினிடோர் வாகன ஓட்டிநரை காவல்துறை தேடி வருகின்றனர்.