தொடர்ந்து 2வது நாளாக 2வது பசுமாட்டினை பத்திரமாக மீட்டுள்ள தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கோவை: கோவை அன்னூர் அருகே 80 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டினை கிரேன் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள தாசபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி. இவர் தனது நிலத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மதியம் தனது பசு மாட்டினை மேய்ச்சலுக்காக விவசாய கிணற்றின் அருகே கட்டி வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் மேய்ச்சலுக்காகச் சென்ற அந்த பசு மாடு திடீரென கால் தவறி விவசாயி கந்தசாமிக்கு சொந்தமான 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
இதனையடுத்து, பசுமாட்டினை பார்க்க வந்த விவசாயி மாடு கிணற்றினுள் விழுந்து நீந்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஆழம் அதிகமாக இருந்த காரணத்தால் கயிறு கட்டி பசு மாட்டினை தூக்க முடியாததால் கிரேன் உதவியை நாடினர்.
இதனையடுத்து, கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேன் உதவியுடன் பசுமாட்டினை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து 2வது நாளாக 2வது பசுமாட்டினை பத்திரமாக மீட்டுள்ள தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.