திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை வரும் பிப்ரவரி 14ம் தேதியும், 17ம் தேதி காலை 9 மணி முதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் பக்தர்கள் தீ மிதிக்கும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா, தை அமாவாசையான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வனப்பகுதியில் இருந்து, கடந்த சனிக்கிழமை அன்று 70 அடி உயரம் கொண்ட மூங்கில் கொடிமரம் எடுத்து வரப்பட்டது.
பின்னர் ஆனைமலை வழியாகச் செல்லும் ஆழியாறு ஆற்றங்கரையில் வைத்து, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இன்று காலை கொடிமரம், ஆனைமலையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில், மாசாணியம்மன் கோயில் முகப்பு பகுதியில் கொடிமரம் ஏற்றப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை வரும் பிப்ரவரி 14ம் தேதியும், 17ம் தேதி காலை 9 மணி முதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவின் இறுதியாக 19ம் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேக அலங்கார பூஜை நடைபெறும் என்று, கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், திமுக ஆனைமலை ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.