மத்திய பட்ஜெட் இந்தியா முழுவதும் உள்ள சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பயன் அளிக்கும் வகையில், உள்ளதால் இந்த அறிவிப்புகளுக்கு, 'கொடிசியா' வரவேற்பு தெரிவித்துள்ளது.
கோவை: மத்திய பட்ஜெட் இந்தியா முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பயன் அளிக்கும் வகையில், உள்ளதால் இந்த அறிவிப்புகளுக்கு, 'கொடிசியா' வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறியுள்ளதாவது:-
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளிலிருந்து, 100-வது ஆண்டை நோக்கி நடைபோடுவதற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளமாகவும், பொருளாதார வரைபட வகையில் அமைந்துள்ள மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை கொடிசியா வரவேற்கிறது.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் உற்பத்தி, பருவநிலை மாற்றம் குறித்த செயல்பாடுகள், நிதி முதலீடுகள் மற்றும் பிரதமரின் “கதி சக்தி” திட்டம் என்ற நான்கு முக்கிய இலக்குகளைக் கொண்டிருக்கிறது. இது ஒரு சமநிலை வரவு செலவுத் திட்டமாக அமைந்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பயன் அளிக்கும் வகையில், இந்த வரவு செலவு திட்டத்தில் அமைந்த கீழ்க்காணும் அம்சங்களை வரவேற்கின்றோம்.
1. அவசர கால கடன் உறுதி திட்டத்தை மார்ச் 2023 வரை நீட்டித்திருப்பதோடு, 50,000 கோடி ரூபாய் என்று இருந்த உறுதி திட்ட வரம்பை 5 லட்சம் கோடியாக உயர்த்தியது.
2. வரும் ஐந்து ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் உற்பத்தியையும் உருவாக்குவதாகவும் அமைந்துள்ள “ஆத்ம நிர்பார் பாரத்” திட்டத்தை எட்டும் வகையில் உற்பத்தியோடு இணைந்த ஊக்கத் திட்டம்.
3. கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து MSME விடுபடும் வகையில் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 6000 கோடி மதிப்பிலான ரேம்ப் (Raising and Accelerating MSME Performance — RAMP) திட்டம்.
4. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முன்னுரிமை தருவதால், ஆயுத இறக்குமதி குறையும்.
5. தகுதி வாய்ந்த “ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு” மேலும் ஓராண்டுக்கு வரி ஊக்கத்தொகை காலத்தை நீட்டிப்பது, அவற்றின் வளர்ச்சிக்கு உதவும்.
6. “ட்ரோன் சக்தி” திட்டம் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு வகையிலும் பயன்பெறும்.
7. பாலிசிலிகான் முதல் சோலார் பிவி மாடுயூல்ஸ் வரை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் 19,500 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு.
8. வரும் 2022 - 2023ம் நிதியாண்டிற்கான முதலீட்டுச் செலவின வகையாக 10.68 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு (இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1% ஆகும்).
9. மின் வாகன பயன்பாட்டு சூழலை ஊக்குவிக்கும் வகையில் நகரங்களில் பொதுப்போக்குவரத்து மாற்றம் தொடங்கி, மாசற்ற தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம், பெட்ரோலியம் போன்ற எரிபொருள்கள் இல்லா பசுமை ஆற்றல் கொள்கை கொண்ட சிறப்புப் போக்குவரத்து பகுதிகள்.
10. வரும் 2022 - 2023ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மேலும் 25,000 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் 20,000 கோடி ரூபாய்க்குப் புதுமையான நிதி முதலீடுகளை திரட்டுதல்.
என்றாலும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படாத, பலமுறை MSME நிறுவனங்களால் தங்களுடைய தேவை என வலியுறுத்தப்பட்ட சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறோம்:
1. இரும்புத்தாது, ஸ்டீல், காகிதம், பிளாஸ்டிக், பருத்தி போன்ற மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்குத் தடை
2. இறக்குமதி வரியில்லாமல் அனைத்து மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்தல்
3. அனைத்து பொருட்களையும் 5%, 10%, 15% என மூன்று வகை ஜிஎஸ்டி வரி விகித வரம்புக்குள் கொண்டு வருதல்
4. சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வருமான வரியையும் பெரு நிறுவனங்களின் வருமான வரி விகிதத்தைப் போலவே கணக்கிடுதல்
5. தனி நபர் வருமான வரி வரம்பை உயர்த்துதல்
6. கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட MSME நிறுவனங்களுக்கு புதிய கடன் அறிவிப்புகள்
7. 90 நாட்களாக உள்ளதை, 180 நாட்களுக்கு நீட்டிக்குமாறு கேட்டிருந்த “இயங்காச் சொத்து” நிறுவன (NPA) நடைமுறை
மேற்கண்ட வேண்டுகோள்களையும், மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.